×

எஸ்பிஐ வங்கியிடம் சிறிது நேர்மையை எதிர்பார்க்கிறோம்…தேர்தல் பத்திர வழக்கில் நாளை மாலைக்குள் விவரங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி!!

டெல்லி : தேர்தல் பத்திர வழக்கில் நாளை மாலைக்குள் விவரங்களை தாக்கல் செய்ய எஸ்.பி.ஐ. வங்கிக்கு உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை கடந்த மாதம் 15ம் தேதி ரத்து செய்த உச்ச நீதிமன்றம். 2019 ஏப்ரல் 12ம் தேதியிலிருந்து தற்போது வரை தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட அனைத்து பங்களிப்பு விவரங்களையும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6ம் தேதிக்குள் வழங்க வேண்டுமென தீர்ப்பளித்தது. இந்த அவகாசத்தை ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கக் கோரி எஸ்பிஐ தரப்பில் கடந்த 4ம் தேதி மனுதாக்கல் செய்யப்பட்டது.அதே சமயம், தேர்தலுக்கு முன்பாக தேர்தல் பத்திரங்கள் விவரங்களை வெளியிடாமல் இருப்பதாக நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தத் தவறியதற்காக எஸ்பிஐ வங்கி மீது தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த வாதங்கள் பின்வருமாறு…

எஸ்.பி.ஐ தரப்பு.. தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நிதி விவரங்களை தொகுக்க கால அவகாசம் தேவை. நடைமுறை சிக்கல்களால் நன்கொடையாளர்கள் விவரங்களை தாக்கல் செய்ய ஜூன் 30 வரை அவகாசம் தேவை.

தலைமை நீதிபதி அமர்வு : தேர்தல் பத்திரங்களின் விவரங்களைத் தான் தாக்கல் செய்ய உத்தரவிட்டோமே தவிர, தரவுகளை சரிபார்க்க சொல்லவில்லை.26 நாட்களாக பாரத ஸ்டேட் வங்கி என்ன செய்து கொண்டிருந்தது?. இவ்வளவு நாட்களில் குறைந்தபட்சம் 5,000 அல்லது பத்தாயிரம் தேர்தல் பத்திர தரவுகளை அளித்திருக்கலாமே?.நாட்டிலேயே பெரிய வங்கியான எஸ்.பி.ஐ.யால் தகவல்களை எடுப்பது கடினமான செயலா?. தேர்தல் பத்திர விவரங்கள் அடங்கிய உறையை பிரிக்க முடியாதா?.தேர்தல் பத்திர விவகாரத்தில் பாரத ஸ்டேட் வங்கியிடம் சிறிது நேர்மையை எதிர்பார்க்கிறோம். கடந்த ஒருமாதமாக எஸ்.பி.ஐ. வங்கி எதுவும் செய்யவில்லை.நடைமுறை பிரச்சனைகளை கூறிக்கொண்டு இருக்காமல் நாங்கள் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்துங்கள்.

இவ்வாறு வாதங்கள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தேர்தல் பத்திர வழக்கில் நாளை மாலைக்குள் விவரங்களை தாக்கல் செய்ய எஸ்.பி.ஐ. வங்கிக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. 3 வாரம் அவகாசம் கேட்ட எஸ்பிஐ வங்கியின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், எஸ்.பி.ஐ.யிடம் தகவல்களை பெற்று மார்ச் 15-க்குள் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் பத்திர விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அத்துடன், உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது குறித்த பிரமாண பத்திரத்தை எஸ்பிஐ தலைவர், மேலாண் இயக்குநர் தாக்கல் செய்ய ஆணையிட்ட நீதிபதிகள், எஸ்பிஐ தரப்பு வாதங்களை பார்க்கும் போது, தேர்தல் பத்திர விவரங்கள் தயாராக உள்ளது தெரிய வருகிறது என்றும் நாளைக்குள் தேர்தல் பத்திர விவரங்களை வழங்கவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்றும் எஸ்பிஐக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

The post எஸ்பிஐ வங்கியிடம் சிறிது நேர்மையை எதிர்பார்க்கிறோம்…தேர்தல் பத்திர வழக்கில் நாளை மாலைக்குள் விவரங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி!! appeared first on Dinakaran.

Tags : SBI Bank ,Supreme Court ,Delhi ,Dinakaran ,
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...